பல்லாயிரம் மைல்கள் கடக்கும்
பறவையொன்றின் நினைவில்
திசையாய் நீளுபவை
சிறகுணரும் காற்றின் கீதமா
வெளி மிதக்கும் மித வெப்பமா
நீளும் மண் வாசமா
சுவாசம் தாங்கும் இணையின் வாசமா
நினைவில் அழுந்தும்
திசை பற்றிய குறிப்புகளா
வருடதிற்கொரு முறை வந்தாலும்
வழி தப்பாமல் வந்து விடுகின்றன
சரணாலயதிற்குப் பறவைகள்.
கட்டிடங்கள்
அடையாளங்கள்
நினைவிடங்கள்
குழம்பித் திரியும் நினைவுகளில்
கோடுகள் இல்லா பாதைகள்
இல்லை என்பதும்
சரணாலயம் என்றொன்று
வாய்ப்பதில்லை என்பதுமே
தொலைக்கும் பாதைகளுக்கான
காரணங்களாகின்றன.